சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் எவ்வளவுக்கு எவ்வளவு ஹிட் ஆனதோ அதே அளவு சென்சேஷ்னல் ஹிட்டானது ஊ சொல்றியா மாமா பாடல்தான். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா அந்தப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். இதனையடுத்து தற்போது உருவாகும் புஷ்பா 2 படத்திலும் அதேபோல் ஒரு நடனம் ஆடுவதற்கு சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு சமந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பிற நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். மேலும், இலங்கை மற்றும் தாய்லாந்தில் ஷூட் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைந்து படத்தின் வெளியீடு சீக்கிரமாகவே இருக்கும் என்றும், படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் முக்கியமான அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் படத்தின் டீஸர் வெளியாகலாம் என்றும், அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் யூகித்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
