தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘வாத்தி’. தமிழ்,
தெலுங்கு மொழியில் ரிலீசாகியுள்ள இந்தப்படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள்
குவிந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில்
இந்தப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்து படக்குழுவினர்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் இரண்டு படங்கள் வெளியானது. மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படங்களில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அத்துடன் பெரியளவில் புரமோஷன் இல்லாமல் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ 100
கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழியில் உருவான ‘வாத்தி’ படத்தில் நடித்தார் தனுஷ். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்தப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் சம்யுக்தா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள
இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் ரிலீசாகியுள்ள இந்தப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனது.
இந்தப்படத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்வியை வைத்து வியாபாரம் செய்யப்படுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. வழக்கம்போல தனுஷின் நடிப்பு இந்தப்படத்திலும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் வாத்தி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ‘வாத்தி’ படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியான முதல்
நாளில் 8 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது சனி, ஞாயிறு வார இறுதி நாட்களை சேர்த்து மொத்தம் மூன்று நாட்களில் 51 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் 100 கோடி கிளப்பிலும் ‘வாத்தி’ படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட ராவான படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் பிலிமாக ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
