பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ஏற்கனவே செல்வராகவன் சாணி காகிதம், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்ததால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஆனால் படம் வெளிவந்த பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இயக்குனர் பிற்போக்குத்தனமான சிந்தனைகளை காட்சிப்படுத்தி இருப்பதாக பல விவாதங்கள் எழுந்தன. தான் இயக்கும் படங்களின் மூலம் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும் இயக்குனர் மோகன் ஜி, இந்த படத்திலும் அதையே செய்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
அதேசமயம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘பகாசூரன்’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட தயாரிப்பாளர் கௌதம், இயக்குநர் மோகன்.ஜி-க்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்சை பரிசாக வழங்கினார். அத்துடன், கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவுடன் நடிகர் ரிச்சர்ட்டும் கலந்துகொண்டார். ரூ.7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.5 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘பகாசூரன்’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மோகன்.ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி… என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்…” என்று பதிவிட்டுள்ளார். மோகன் ஜியின் இந்த அறிவிப்பு வெளியானதும் இந்த முறை அவர் என்ன கதை களத்தில் எடுக்க போகிறார் என இணையதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.