நடிகை நயன்தாரா முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டோடன் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் பிரபல ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவரும் நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் இந்தப் படத்தில் ஷாருக்குடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இன்னும் இரு மாதங்களில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டார் நயன்தாரா. கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது காதல் பயணம் திருமணத்தில் முடிவடைந்துள்ளது. இதனிடையே திருமணம் நடந்ததில் இருந்து தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்கி வருகிறார் நயன்தாரா. வாடகைத்தாய் விவகாரம், பதிவுத் திருமணத்தை மறைத்த விவகாரம் என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
ஏகே62 படத்தில் கமிட்டான விக்னேஷ் சிவன், அதிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அடுத்த ஹீரோவுடன் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே மும்பையில் தங்கி ஜவான் படத்தின் சூட்டிங்கில் நடித்து வருகிறார் நயன்தாரா. அவருடன் விக்னேஷ் சிவனும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்துள்ளனர்.
இவர்களின் இந்த சந்திப்பு சில மணிநேரங்கள் நீடித்த நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி நயன்தாராவை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த காட்சிகள் வீடியோவாக இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த சந்திப்பின் காரணம் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் காணப்படுகின்றன. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நயன்தாரா இணைகிறாரா அல்லது அவரது படத்தை நயன்தாரா தயாரிக்கிறாரா என்பது போன்ற யூகங்கள் வெளியாகி வருகின்றன.
