கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி, இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இதற்கு முன்னர் இந்த கதையை படமாக்க நடிகர் எம் ஜி ஆர், உலகநாயகன் கமலஹாசன், உள்ளிட்ட பலர் முயற்சி செய்த நிலையில்.. இப்படத்திற்கான பட்ஜெட் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் படமாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம், இதனை தன்னுடைய கனவு படமாக இயக்கி முடித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சுமார் ரூ.500 கோடிக்கு மேல், வசூல் சாதனை செய்தது. 5 பாகங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு கதையை, படமாக இயக்க முடியுமா என்பதே மிகப்பெரிய சவாலாக இருந்த நிலையில், இதனை சாத்தியமாக்கி காட்டினார் இயக்குனர் மணிரத்னம்.
இப்படத்தில் ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவியும், வந்திய தேவனாக கார்த்தியும், கரிகாலனாக விக்ரமும், நடித்திருந்தனர். மேலும் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும் நடித்திருந்தார். அனைவருமே தங்களுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியது மட்டும் இன்றி, இளைய தலைமுறையினருக்கும் புரியும் விதத்தில், இப்படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. அந்த வகையில் சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான, அகநக பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ட்ரெய்லர் மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 நிமிடங்கள் 25 நொடிகள் கொண்ட ட்ரெய்லர் சென்சார் செய்யப்பட்டு தயாராக இருப்பதாகவும், அது மார்ச் 29ஆம் தேதி மாலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முதல் பாகத்தை பிரமோட் செய்தது போல் பொன்னியின் செல்வன் படக்குழு மீண்டும் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
