மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படத்தில், கதாநாயகனாக நடிகர் கதிர் நடித்திருந்தார். நாயகியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். மேலும் கலையரசன், விஜி சந்திரசேகர், வேல ராம மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்த படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் முதல் பாடலான ‘அத்தனபேர் மத்தியில’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என வீடியோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிலம்பரசன் டிரைலரை வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
