சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என அரசியலில் அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்தாலும், சினிமாவிலும் அழுத்தமான முத்திரையை பதிக்கும் முயற்சியில் உள்ளார் உதயநிதி ஸ்டாலின். கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ வெளியானது. இதனையடுத்து அவரின் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். இப்படத்தில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார். இந்த படம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த இயக்குனர் மு. மாறன், இது கிரைம் த்ரில்லர் படம்.
ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் அப்பாவி, அதில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் கதை. உதயநிதி, கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவராக நடிக்கிறார். அவரிடம் முதலில் காதல் கதை ஒன்றைச் சொன்னேன். ‘கதை நன்றாக இருக்கிறது. இப்போது காதல் கதை எனக்கு வேண்டாம், கிரைம் கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார்.சொன்னேன். பிடித்திருந்தது. அப்படித்தான் தொடங்கினோம். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் ‘கண்ணை நம்பாதே’ என்று தலைப்பு வைத்தோம். எப்படி பொருந்துகிறது என்பது படம் பார்க்கும்போது புரியும். திரைக்கதை பரபரப்பாக இருக்கும்.
படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே முக்கியத்துவம் இருக்கும். 80% கதை இரவில் நடக்கும். இரண்டாம் பாதி முழுவதும் ஓரே இரவில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது எனக் கூறி இருந்தார். இந்த நிலையில், க்ரைம் த்ரில்லர் வகை திரைப்படமான ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அட்டகாசமான த்ரில்லராகவும், அடுத்தடுத்த பகீர் திருப்பங்கள் நிறைந்ததாகவும் உள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
