Friday, April 26, 2024
- Advertisement -
HomeEntertainmentஷாருக்கானுக்காக உருவாக்கிய கதையை, எஸ்.கே-வை வைத்து இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்… இயக்குனரின் பலே திட்டத்தால்...

ஷாருக்கானுக்காக உருவாக்கிய கதையை, எஸ்.கே-வை வைத்து இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்… இயக்குனரின் பலே திட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி…

கோலிவுட்டில் பல்வேறு வெற்றி பட இயக்குனர்கள் இருந்தாலும், அவர்களில் குறிப்பிட்ட சிலரே தங்களுக்கு என ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். வெற்றிமாறன், பா ரஞ்சித், ஹெச் வினோத், மணிரத்னம், வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ் என இதில் சிலரை கூறலாம். இந்தப் பட்டியலில் காலம் தொட்டு கடந்து நிற்பவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். வாலி திரைப்படத்தின் சமயத்தில் எஸ் ஜே சூர்யாவிடம் உதவியாளராக இருந்த அவர், அந்த சமயத்தில் அஜித்திடம் தீனா படத்தின் கதையை கூறி அவர் நடிக்க சம்மதிக்க வைத்தார்.

- Advertisement -

தனது முதல் திரைப்படத்திலேயே அஜித்திற்கு மாஸான ஓபனிங் காட்சியை வைத்த ஏ ஆர் முருகதாஸ், முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் தீனா படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான், மகாநதி சங்கர் அஜித்தை அன்போடு தல என்று அழைக்க, பின்னாளில் அவருக்கு அது அடைமொழியாக மாறியது. முதல் படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் விஜயகாந்துடன் இணைந்த ஏ ஆர் முருகதாஸ், ரமணா படத்தை கொடுத்தார்.

தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு எனும் பஞ்ச் டயலாக் உடன், லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுத்த அந்த திரைப்படத்தில், வேறொரு விஜய்காந்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கூறினர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் ஏ ஆர் முருகதாஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த கஜினியை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ், அதே திரைப்படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து இயக்கி வெற்றி வாகை சூடினார்.

- Advertisement -

அந்த சமயத்தில் தன்னை தயாரிப்பாளராகவும் நிலை நிறுத்திக் கொண்ட அவர், எங்கேயும் எப்போதும், மான் கராத்தே, ராஜா ராணி போன்ற திரைப்படத்தை வழங்கினார். தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தி என்ற இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த முருகதாஸ், சமீபகாலமாக பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். அவர் இயக்கத்தில் வெளியான சர்கார், ஸ்பைடர், தர்பார் ஆகிய மூன்று திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இதன் பிறகு விஜய் உடன் அவர் ஜோடி சேர்வதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் அது நடக்காமல் போனது. தனது மறுப்பிரவேசத்திற்காக காத்திருக்கும் இயக்குனருக்கு, சிவகார்த்திகேயன் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, கதாநாயகியாக மிருணால் தாகூர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியில் கஜினி படத்தை எடுத்து முடித்த பிறகு, ஷாருக்கான் வைத்து புதிய படத்தை இயக்க ஏ ஆர் முருகதாஸ் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் பல காரணங்களால் வந்து அந்தத் திட்டம் நடைபெறாமல் இருக்க, தற்போது அந்தக் கதையை தான் தமிழுக்கு ஏற்றார் போல் சிவகார்த்திகேயனுக்காக முருகதாஸ் மாற்றி உள்ளாராம். இந்தத் தகவலால் எஸ் கே ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சூழலில், அதன் பணிகள் முடிந்த பிறகு அவர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular